பத்துமாதம் சுமந்த போது
பத்திரமாய் என்னை ஈன்றபோது
ஏன்... என் உயிர் பிரிந்தபோது கூட
வலித்காதவொரு வலியை அனுபவித்திருப்பாய்
என்னை எரித்தபோது...
என் சம்பல் மேல்தான் இவர்கள்
பாதுகாப்பாய் இருப்பார்கள் என்றால்
அதில் நீ
சந்தோசம்கொள் அம்மா..
இந்த உலகில் நான்
வாழ்ந்த நாட்கள்
இருபதே என்றாலும்
உன்னோடு வாழ்ந்திருக்கிறேன்
ஈரைந்து மாதங்கள்
கருவிலே இருந்த என்னோடு
நீ
பேசியிருக்கிறாய்
கொஞ்சியிருக்கிறாய்
சிரித்திருக்கிறாய்
அழுதிருக்கிறாய்
அடிக்கடி உன் வயிற்றின்மேல்
ஆசையாய் என்னைத்
தொட்டுத் தடவியிருக்கிறாய்
நானும்
என் பிஞ்சுக் கால்களால்
உன்னை உதைத்திருக்கிறேன்
வலித்திருந்தால் மன்னித்துவிடு அம்மா...
புரண்டு படுத்தால்
என்னை பாதிக்குமென்று
தூக்கத்தில் கூட என்னில்
கரிசனம் கொண்ட உனக்கு
நான் தீயில் பொசுங்கியதை தாங்கிக்கொள்ள
முடியாமல்தான் இருக்கும்
அழாதே அம்மா....
இப்ராஹிமை எரிக்காத நெருப்புதான்
என்னுடலை பொசுக்கியது
அது எனக்கு
வேதனைகொடுத்திருக்குமென்று
நீ நினைக்கிறாயா?
அழாதே அம்மா..
என்னுடலை எரித்தது சதியென்றாலும்
அதுவே என் விதியென்று நீ
அறியவில்லையா?
படைத்தவன் விரும்பம்
அதுவே அம்மா - அவன்
படைப்பினில் நானும்
சிறந்தேன் அம்மா..
நீ அழாதே...
அழாதே அம்மா...
சுவனத்தில் உனக்காய்
காத்திருப்பேன் அம்மா
அங்கு வந்து
உன் ஆசைதீர
என் பசிதீர
எனக்குப் பால்கொடு அம்மா...
-அர்ஷத்
Social Plugin